கோவை சாய்பாபா கோயில் கண்ணபுரம் கணேசன் என்பவரின் மகன் திவ்ய குமார். இவரது மனைவி கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள எம் எஸ் எம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்திடம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் என்ற முறையில் முப்பதாயிரம் ரூபாய் கடனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் பெற்றுள்ளார்.கொரோனா ஊரடங்கு காரணமாக கடன் தொகையை சரிவர செலுத்த முடியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பணம் வசூலிப்பதற்காக வந்திருந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் 20 ஆயிரம் கடன் பாக்கி, வட்டியுடன் சேர்த்து 82 ஆயிரம் ரூபாயாக ஆனதாக தெரிவித்துள்ளனர். மேலும், தகாத வார்த்தைகள் பேசி சண்டை போட்டுள்ளனர். அப்போது திவ்யகுமார் தான் சமூக சேவகர் என்றும் தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்திருக்கிறார். அவர்கள் அவரது விசிட்டிங் கார்டை வாங்கி கசக்கி வீசியுள்ளனர். மேலும் திவ்யகுமாரையும் அவதூறாக பேசியுள்ளனர்.
தொடர்ந்து திவ்ய குமார் ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பெயரில் எம் எஸ் எம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமல், விக்னேஷ், பிரதீப் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல எம்எஸ்எம் பைனான்ஸ் நிறுவனத்தின் பணியாளர் பிரதீப்( 22) அளித்த புகாரின் பேரில் திவ்ய குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













