.
கோவை நகரின் முக்கிய பகுதியான உப்பிலிபாளையம் அவிநாசி சாலை மேம்பாலத்தின் அருகில் தமிழக அரசுக்கு சொந்தமான காதி கிராப்ட் விற்பனையகம் உள்ளது. இங்கு நேற்று இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு பணியாளர்கள் விற்பனையகத்தை பூட்டிவிட்டு சென்றனர்.
இன்று காலை 9 மணி அளவில் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது சேலைகள் சிதறிக்கிடந்தது. தொடர்ந்து பணியாளர்கள் பார்த்த பொழுது காதி கிராப்ட் விற்பனையக பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காதிகிராப்ட் நிர்வாகம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காதி கிராப்ட் விற்பனையகத்தின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 6 லட்ச ரூபாய் மதிப்பில் 60 விலை மதிப்புள்ள பட்டுச் சேலைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போகாமல் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஒரே நாள் இரவில் கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவமும் அதற்கு அடுத்து சிறிது தூரத்திலேயே உள்ள காதி கிராப்ட் விற்பனையகத்தில் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள 60 பட்டு சேலைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.