சென்னை பூவிருந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வடமாநிலத்தவர் தங்கி வருவதாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் விடுதிக்கு சென்று அந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஃபர்மான் கான்(24) என்பது தெரியவந்தது. இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் விலையுயர்ந்த செல்போன், வாட்ச், உதிரிபாகங்கள் ஆகியவை இருந்தது. இது குறித்தான ஆவணங்கள் கேட்டு விசாரணை நடத்திய போது பல தகவல்கள் வெளியானது.
ஃபர்மான் கான் ஏஜெண்ட் மூலமாக துபாய்க்கு சென்று என்பிராய்டரி பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் கொரோனா காரணமாக வேலை இழந்ததால் கையில் பணமில்லாமல் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளார். அப்போது அங்கு பழக்கமான நபர் ஒருவர் இந்தியாவிற்கு தான் இலவசமாக விமான டிக்கெட் போட்டு தருவதாக ஃபர்மான் கானிடம் கூறியுள்ளார். ஆனால் தான் கொடுக்கும் பையை ஆந்திராவில் உள்ள நபரிடம் வழங்க வேண்டுமென ஃபர்மான் கானிடம் அந்த நபர் கூறியுள்ளார். தான் கொடுக்கும் தொப்பி மற்றும் ஷுவை அணிந்து கொண்டு சென்றால் போதும் அவர்களே பையை ஆந்திராவில் வாங்கி கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். வேறு வழியின்றி இதற்கு ஃபர்மான் கான் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து பர்மன் கான் விமானம் மூலமாக துபாயில் இருந்து சென்னைக்கு வந்து அமைந்தகரையில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதால் விடுதி உரிமையாளர் அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து முறையான ஆவணமில்லததால் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் மற்றும் பர்மன்கானை அமைந்தகரை போலீசார் சுங்கதுறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சுங்கதுறை அதிகாரிகள் ஃபர்மான் கானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.