சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபையில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.
வீட்டு உபயோக பொருட்களான அரிசி குக்கர், ஜுசர், மிக்சி போன்ற பொருட்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது மோட்டார்களில் தங்கத்தை வளையங்கள் போல் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.
ரூ. 4 கோடியே 3 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 170 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.














