கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் அன்பரசன் என்பவரின் மகன் ஆனந்தகுமார் (34 ).இவர் தனது மனைவி நந்தினி (28) உடன் வசித்து வந்தார். ஆனந்தகுமார் கணபதி பகுதியில் உள்ள கறி கடையில் பணிபுரிந்து வந்தார்். மேலும் ஆனந்தகுமாருக்கு கடுமையான குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது மனைவி அவரை பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு சென்றார்.
அப்போது ஆனந்தகுமார் மனைவியை தன்னுடன் வாழ அனுமதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி சாணி பவுடரை குடித்தார். பின்னர் அவர் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். மீண்டும் அவரது மனைவி ஆனந்தகுமார் உடன் சேர்ந்து வசிக்க துவங்கினார். இதையடுத்து அவரது மனைவி இரண்டு மாத கர்ப்பமானார். இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்த ஆனந்தகுமார் உடன் ஏற்பட்ட தகராறில் நந்தினி கீழே விழுந்தார் .இதில் நந்தினியின் கர்ப்பம் கலைந்துவிட்டது.
இதையடுத்து நந்தினி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ஆனந்தகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சாணி பவுடர் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அருகிலுள்ளவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஆனந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












