சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது தஞ்சாவூரை சோ்ந்த அகிலன்(27) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். அகிலன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்த போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.
ரூ. 31 லட்சம் மதிப்புள்ள 633 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அகிலனை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது சார்ஜாவில் ஒருவர் இந்த தங்கத்தை தந்து சென்னைக்கு சென்றால் விமான நிலையத்தில் ஒருவர் பெற்றுக் கொண்டு ரூ. 10 ஆயிரம் செலவுக்கு தருவார் என கூறினார்.
உடனே அகிலனை விமான நிலையத்திற்கு வெளியே சுங்கத்துறை அதிகாரிகள் அழைத்து வந்து கண்காணித்தனர். அப்போது அகிலனிடம் இருந்து தங்கத்தை வாங்க வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது உவைசி(27) என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து அகிலன், முகமது உவைசி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.











