சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள பழக்கடையில் பணியாற்றி வருபவர் சரிஜா(35). இந்த பழக்கடைக்கு பழம் வாங்குவது போல் வந்த நபர் ஒருவர் சரிஜாவிடம் பேச்சு கொடுத்து, பின்னர் தான் கணினி விற்கும் ஏஜெண்டாக பணியாற்றி வருவதாக அறிமுகப்படுத்தி கொண்டு மிகவும் குறைந்த விலையில் கணினி வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சரிஜா அந்த நபரிடம் 10,000 ரூபாயை கொடுத்துள்ளார். மேலும் உடனே கணினியை கொண்டு வருவதாக கவனத்தை திசைதிருப்பி தப்பியோடி உள்ளார்.
இது குறித்து சரிஜா அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பழக்கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கவனத்தை திசைதிருப்பி பணத்தை பெற்று கொண்டு செல்லும் நபர் வடமாநிலத்தவர் போல் இருந்தது. இதனையடுத்து போலீசார் கவனத்தை திசை திருப்பி திருடும் வடமாநிலத்தவரின் புகைப்படங்களுடன் ஒப்பிட்ட போது அடையாளம் கிடைக்கவில்லை.

இதனால் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த நபரை தீவிரமாக தேடிய போது அடையாறு பாலம் அருகே சந்தேகப்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் சிசிடிவியில் பதிவான அதே நபர் என்பது தெரியவந்தது. அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த சரவணன்(40) என்பது தெரியவந்தது. இவர் ராயப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கொண்டு ஆக்டிங் ஓட்டுனராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

சரவணன் பழக்கடைக்கு சென்று ஊழியரிடம் பேச்சு கொடுத்து கணினியை குறைந்த விலையில் தருவதாக கூறி நம்பவைத்து கவனத்தை திசைதிருப்பி பணத்தை பெற்று கொண்டு தப்பியோடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதே போல் ஈக்காட்டுதாங்கல், அடையாறு, சாஸ்திரி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள பழக்கடை வியாபாரியிடம் ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து சரவணன் மீது வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.













