திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் பகுதியில் இளைஞர் ஒருவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார்ரெட்டி அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மேலும் இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதியில் முகாமிட்டு தனிப்படை காவல்துறையினர் கண்காணித்தபோது திருப்பதி மகன் நேரு (வ.20) என்பவர் 1 கிலோ 250 கிராம் கஞ்சா மொத்தமாக வைத்துக்கொண்டு ஆங்காங்கே கஞ்சா பிரியர்களுக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளைஞரை கையும் களவுமாக கைது செய்து செங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் ஒப்படைத்தார்கள்.
இதேபோல் சுற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் தனிப்படை அமைத்து விரைவில் அவர்களையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.














