சென்னை தலைமை செயலகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யா இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
அவருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பதவிபிரமானம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து கடந்த மே மாதம் 7 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார்.
அதை தொடர்ந்து மே 11 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தற்காலிக பேரவை தலைவர் பிச்சாண்டி முன்னிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்களாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அன்றைய தினம் 223 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் 6 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 10 உறுப்பினர்கள் அன்றைய தினம் பதவியேற்கவில்லை.
பதவியேற்காத சட்டமன்ற உறுப்பினர்களில் ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யாவை தவிர்த்து மீதமுள்ள 9 பேர் கடந்த மே 24 ஆம் தேதி பதவியேற்ற நிலையில், இன்று தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறையில் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் ஓட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகய்யா பதவியேற்றுக்கொண்டார்.














