கோவை அவினாசி சாலை ஹோப் காலேஜ் நான்கு முனை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே நேற்று இரவு குடிநீர் குழாய் உடைப்பு தொடர்பாக சாலையில் குழி தோண்டப்பட்டு அப்படியே மூடி விட்டு சென்று விட்டனர். இதனால் இந்த நான்கு முனை சந்திப்பில் குழியிலிருந்து ஜல்லி கற்கள் சாலை முழுவதும் சிதறியது. இன்று காலை இந்தச் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது .காலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வந்த பீளமேடு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜசேகரன் சாலையில் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களால் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்வதை பார்த்தார். மேலும் காலை நேரத்தில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வேலைக்கு செல்பவர்கள் இந்த ஜல்லி கற்களால் வாகனத்தை தடுமாறிக் கொண்டே ஓட்டி செல்வதை பார்த்தார்.
உடனடியாக அருகில் இருந்த கடையில் விளக்குமாற்றையும் முறத்தையும் எடுத்து சாலை முழுவதும் சிதறிக் கிடந்த ஜல்லி கற்களை தூரத்தில் எடுத்து அப்புறப்படுத்தினார். அவர் பணியை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.