பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு ’விருமாண்டி’நடிகர் சண்முகராஜன் முதல் ஆளாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
’எனது குரு சிவசங்கர் பாபா.. நான் ஆறு வருடமாக சித்தர் வழிபாட்டில் இருக்கேன். கடந்த நான்கு வருடங்களாக சிவசங்கர் பாபாவுடன் இருக்கிறேன். கடந்த 20 தினங்களாக பாபா பாலியல் குற்றவாளி என்று நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அதில் ஒருதுளி கூட உண்மை கிடையாது. இந்த பொய் குற்றச்சாட்டுக்கு காரணம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் அமிர்தா பாலாஜி, ஆசிப் என்ற இருவரும்தான்.
பத்ம சேஷாத்ரி சூழலை காரணமாக வைத்து புகார் தெரிவித்துள்ளனர். உண்மையில் அந்த மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகத்தில் உள்ள இருவர் மீதுதான் கோபம்” என்று வக்காலத்து வாங்கியுள்ளதோடு, ‘இந்த விவகாரம் தவறாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் பாபாவின் சீடர்கள் 50 லட்சம் பேர் மன உளைச்சலில் உள்ளோம். பாபாவுக்கு ஆதரவாக இனிமேல் ஏராளமானோர் கருத்து பதிவு செய்வோம்.’ என்று ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

மேலும், ‘தற்போதைய ஆட்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நேர்மையாளர் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்று ஆட்சிக்கும் நற்சான்று பகர்ந்துள்ளார்.
‘பள்ளி நிர்வாகக் குழு சார்பில் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டிய முடிவில் இருக்கின்றனர்.’ என்று கூறும் அவர், அதற்கு முரணாம, ‘பள்ளி நிர்வாகத்தை விளக்கம் செய்ய சொல்லி நாங்கள் வலியுறுத்திவருகிறோம். அவர்கள் முறையான விளக்கம் அளிக்காததன் காரணமாகத்தான் போக்ஸோ அளவுக்குச் சென்றுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தை விளக்கம் அளிக்கச் செய்யச் சொல்லி போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றும் கூறியுள்ளார்.
எதையாவது தெளிவாக சொல்லி ஸ்டேட்மெண்ட் விட்டால் நன்றாக இருக்கும்.













