கடந்த 2020 செப்டம்பரில் இந்திய சுதந்திரதினம் குறித்து தோழர் விவேக் என்ற முகநூல்பக்கத்தில் அவதூறாக பதிவிட்டதாகவும் , தொடர்ச்சியாக மாவோயிஸ்ட் அமைப்பின் கொள்கைகள் குறித்து பரப்புரை மேற்கொண்டதோடு, மாவோயிஸ்ட் அமைப்புகள் தொடர்பாக துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்ததாகவும் மதுரையை சேர்த்த மாவோயிஸ்ட் விவேக் மற்றும் சுரேஷ்ராஜன், மோகன் ராமசாமி ஆகிய 3பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
கடந்த மார்ச் மாதம் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, தற்போது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் மூவரும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களிலும், மாவோயிஸ்ட் அமைப்புகளின் கொள்கைகள் குறித்து துண்டு பிரசுரங்கள், பதாகைகள், கையால் எழுதப்பட்ட குறிப்புகள், புகைப்படங்கள் போன்றவற்றின் மூலமாக பரப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவோயிஸ்ட் அமைப்பின் கீழ் செயல்படுவதாக மதுரையை சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














