அரசியல், சினிமா பரபரப்பு போஸ்டர்களுக்கு பேர்போனது மதுரை. ரஜினியோ, கமலோ, அவர்களே நினைக்கும் முன்பே அவர்களை அரசியலுக்கு அழைத்தும், எதிராளிகளை சண்டைக்கு இழுத்தும் பெரிய, பெரிய போஸ்டர்களை அங்கு ஒட்டத் தொடங்கிவிடுவர்.
அதை மிஞ்சும் வகையில் இப்போது நெல்லையில் அரசியல் போஸ்டர் யுத்தம் தொடங்கியுள்ளது. அதுவும் தேர்தல் தோல்வியில் நொந்து கிடக்கும் அதிமுகவை அசைத்துப் பார்க்கும் விதத்தில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.
வரும் 14ஆம் தேதி அதிமுக சட்டமன்ற துணைத்தலைவர், கொறடா தேர்வுக்கு முன்பு ஓபிஎஸ்சை கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரது ஆதரவாளர்கள் நெல்லையில் எச்சரிக்கை போஸ்டர் ஒட்டினர். நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றிய அதிமுக சார்பில் ஒட்டப்பட்டதாக அதில் குறிப்பிட்டிருந்தாலும், யார் இந்த வேலையை செய்தது என்று கட்சியினரை விட காவல்துறையினர் அக்கறையாக தேடத் தொடங்கினர்.
இந்நிலையில், ஈபிஎஸ் கட்சியை காப்பாற்றியது தொடர்பாக ஒரு போஸ்டர் இன்று ஒட்டப்பட்டுள்ளது. கொரோனா சூழலில் நெல்லையே அல்லோகல்லப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவின் இந்த போஸ்டர் யுத்தம் அக்கட்சியினரை மட்டுமின்றி, அனைத்து மக்களையும் ஆர்வப்படுத்தியுள்ளது. இனி இந்த யுத்தம் பிற மாவட்டங்களில் பரவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.















