தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் வழியாக கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தூத்துக்குடி மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் காவல் ஆய்வாளர் ரோஸ்லின் சேவியோ, உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் அடங்கிய தனிப்படையினர் குரும்பூர் மெயிரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி மற்றும் காரை மறித்து சோதனை செய்ததில், அதில் 49 அட்டைப் பெட்டிகளில் 180 மில்லி அளவு கொண்ட 480 மதுபாட்டில்கள், அதே அளவு கொண்ட 1872 மதுபான பாக்கெட்டுகள் என மொத்தம் 2352 குவார்ட்டர்கள் மற்றும் ரொக்கம் ரூபாய் 14,51,850 இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது,
உடனே போலீசார் அவற்றை பறிமுதல் செய்து, மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக கொண்டு சென்ற விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த மகாதேவன் மகன் சிவராமன் (40), திருப்பூர் படியூரைச் சேர்ந்த மணி மகன் மெய்யழகன் (38) மற்றும் திருப்பூர் மன்னரை பாளையக்காடு பகுதியைச் சேர்ந்த மொக்கராசு மகன் பூபாலன் (35) ஆகியோரைக் கைது செய்தனர்.

விசாரணையி ல் மேற்படி 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, அவற்றை தமிழ்நாட்டில் கும்பகோணம், புதுக்கோட்டை மாவட்டம், மதுரை, மேலூர் மற்றும் நாங்குநேரி உட்பட பல இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்த்துவிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் விற்பனை செய்ய வந்த போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
மேற்படி 3 பேரைக் கைது செய்து 2352 மதுபாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகள், ரொக்கம் ரூபாய் 15 லட்சம், லாரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.














