தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடித்து வரும் 9-ம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் இந்த படத்தின் டிக்கெட் மும்முறமாக விற்பனையாகி வருகிறது.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தனியார் திரையரங்கில் 9-ம் தேதி காலை 9 மணிக்கு விஜயின் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு இலவசமாக ரசிகர் மன்ற காட்சியை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வி.ஜி.சரவணன் ஏற்பாட்டில் திரையிடப்பட உள்ளது.

இந்த நிலையில் இதற்காக அப்பகுதியில் பேனர் வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் அதன் ஒரு பகுதியாக திரையரங்கின் அருகே தனியார் இடத்தில் இடத்தின் உரிமையாளரிடம் முறையாக அனுமதி வாங்கி 60 அடி உயர விஜய் நிற்கும் வகையிலான பேனர் பாதுகாப்பான முறையில் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஆனது காவல்துறை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி சாத்தான்குளம் போலீசார் மற்றும் சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் திரையரங்கின் அருகே வந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 60 அடி உயர பேனரை கயிறு மூலம் கட்டி கீழே இறக்கினர்.
மேலும் தீயணைப்பு துறையினர் பேனரை கழற்ற வந்த இடத்தில் அவர்கள் மேலே ஏறி பேனரை கழற்றுவதற்கு பதிலாக இரு சிறுவர்களை 60 அடி உயர பேனரை கம்பத்தின் மேலே ஏற வைத்து ஆபத்தான முறையில் அந்த பேனரை கீழே இறக்கினர்.அப்போது தீயணைப்பு துறையினர் பாதுகாப்பானாக கீழே இருந்தனர்.
மேலும் தீயணைப்பு துறையினர் இரு சிறுவர்களை 60 அடி உயர கம்பத்தில் ஏற வைத்து ஆபத்தான முறையில் பேனரை கீழே இறக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.










