திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சீனிவாசன். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இவருடைய மகன் கபிலன் ( 25).
இவர் தஞ்சை மாவட்டம் ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் உள்ள கோவிலில் நடந்த ழாவுக்கு தனது நண்பர்களுடன் ஒரு காரில் சென்றார். அந்த காரை மன்னார்குடி பிரகதீஸ்வரன் (26) என்பவர் ஓட்டினார். விழாவை முடித்து விட்டு நண்பர்கள் அனைவரும் காரில் மன்னார்குடிக்கு திரும்பினர். சடையார் கோவில்-சாலியமங்கலம் சாலையில் கார் சென்ற போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற பனை மரத்தில் மோதியது.
இதனால் காருக்குள் இருந்த அனைவரும் இடிபாடுக்குள் சிக்கி, சத்தம் போட அருகில் உள்ள கிராம மக்கள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் காரை சாலைக்கு கொண்டு வந்து, அதில் இருந்தவர்களை மீட்டனர். அப்போது டிரைவர் பிரகதீஸ்வரன், கபிலன் மற்றும் மதுரையை சேர்ந்த மோகன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
பின் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நண்பர்கள் 5 பேரை மக்கள் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.















