ஆவணங்கள் தெளிவாக இல்லை என்று கூறி பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான பெண்களை சிலர் பாலியல் வன்கொடுமை செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 6 பேரை காவல்துறை கைது செய்தது. பின்னர் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திருநாவுக்கரசுவின் தாயார் லதா மற்றும் சபரி ராஜன் தாயார் பரிமளா ஆகியோர் சார்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
குண்டர் சட்ட அடைப்பு விதிமுறைகளை அரசு சரியாக பின்பற்றவில்லை. இதற்கான உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.










