தசரா விழா குலசை போல் நெல்லை, பாளையிலும் களை கட்டும்.
அங்கு வேடம் பூணுவது முக்கிய நிகழ்வு போல், இங்கு சப்பர பவனி முக்கியமானது. பாளையில் தசரா விழா தொடங்கியதுமே அனைத்து அம்மன் கோயில்களிலும் கொலு வைப்பார்கள்.
அதுமுதல் 9 நாட்கள் ஆயிரத்தம்மன், பேராட்சியம்மன், தூத்துவாரியம்மன், யாதவர் உச்சினிமாகாளியம்மன், தெற்கு, வடக்கு உச்சினிமாகாளியம்மன், முத்துமாரியம்மன் கோயில்களில் இருந்து 13 சப்பரங்கள் பவனி வரும். அவ்வாறு கடந்த 9 நாட்களாக பவனிவந்த சப்பரங்கள், தசரா விழாவின் இறுதிநாளான இன்று காலை ராமசாமி கோயில் திடலில் அணிவகுத்துள்ளன.
பிற்பகல் அவை புறப்பட்டு மார்க்கெட் திடலில் நிறுத்தப்படும். இரவில் புறப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறையின் பின்னுள்ள எருமை திடலில் நிலைகொள்ளும். அப்போது பக்தர்கள் தேங்காய் உடைத்து, பழம், பூ படைத்து சப்பரத்தில் உள்ள அம்மன் திருவுருக்களை வழிபடுவர்.
இறுதியாக அதிகாலை 2 மணியளவில் சூர சம்ஹார நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறும்.
நெல்லை நகரத்தை பொறுத்தவரை, தச்சநல்லூர், பேட்டை, நகரங்களில் உள்ள அம்மன் கோயில் சப்பரங்கள் யாவும் நெல்லையப்பர் கோயிலின் கீழ ரதவீதிக்கு இன்று காலை வந்து சேர்ந்தன. பக்தர்கள் சக்தி தரிசனம் செய்தனர்.














