கி.ரா. எனப்படும் கி. ராஜநாராயணன் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கிராமிய வாழ்வியல் முறைகளை செவ்வியல் இலக்கியமாக வடிவமைத்தவர். ‘கோபல்ல கிராமம்’ என்ற நாவல் மூலம் இலக்கிய உலகில் புகுந்தார்.அதன் இரண்டாம் பாகமான ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருதுவென்றார்.
அவரது ‘ கிடை ‘ என்ற நாவல் ‘ ஒருத்தி ‘என்ற பெயரில் ,திரைப்படமானது. நகைச்சுவை உணர்வும் வட்டார வழக்காற்று திறனும் மிக்கவர்.குழந்தைகளுக்காக “பிஞ்சுகள்’ என்ற நூலும் பெருசுகளுக்காக ‘ வயது வந்தவர்களுக்கு மட்டும்’ என்ற நூலும் எழுதியுள்ளார்.வேங்கட சுப்பிரமணியன் துணை வேந்தராக இருந்த போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இரு ஆண்டுகள் வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கடைசியாக ‘மிச்ச கதைகள்’என்ற நூலை ஒரு மாதத்திற்கு முன்பு எழுதினார். அதற்கு முன்பு தான் ‘அண்டரண்ட பட்சி ‘அவரது கையெழுத்தில் வெளியானது.’ புத்தகம் பேசுகிறது’ இதழுக்காக எழுத்தாளர் நாறும்பூநாதன் அவரை கடைசியாக பேட்டி கண்டார்.
அவரது மனைவி கணவதி. திவாகர்,பிரபாகர் என்று இரு மகன்கள் உண்டு. புதுவை அரசு அவருக்கு லாஸ்பேட்டையில் வாடகை இல்லாத வீட்டை வசிக்க வழங்கியது. அதில் தான் குடியிருந்து வந்தார்.