அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கொரோனா ஊரடங்கிற்கு பின் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் பக்தர்களின் கூட்டத்தால் கோயில் நிரம்பி வழிகிறது. இந்த கூட்டத்தை பயன்படுத்தி கோயில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தனியார் செக்யூரிட்டிகள் பக்தர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர்.
வாகனங்களை உள்ளே அனுமதிப்பது முதல் பக்தர்களை தரிசனம் செய்ய உள்ளே விடுவது இப்படி எதற்காடுத்தாலும் பக்தர்களிடம் காசை வசூல் செய்கின்றனர். இதற்கு உடந்தையாக கோயில் பணியாளர்களும் இருப்பதால் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து சாமியை தரிசனம் செய்கின்றனர்.
இன்று வெளியூரிலிருந்து ஒரு குடும்பத்தினர் கைக்குழந்தையுடன் காலை 7.30 மணியளவில் தரிசனம் செய்ய கோயிலுக்குள் சென்றனர். ஏற்கனவே அபிஷேகம், அலங்காரத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குழந்தையுடன் ரூ.250 தரிசன வரிசையில் நின்ற அந்த குடும்பத்தை சேர்ந்த பெண், உள்ளே மூலஸ்தான பகுதிக்குள் சென்றதும் அங்கும் கூட்டம் அசையாமல் நின்றது. செக்யூரிட்டிகள் விஐபி களை அதிக நேரம் சுவாமிக்கு முன்பு தரிசனத்துக்கு நிறுத்துவதால் இது போன்று நிகழ்கிறது.
கூட்டத்தை பார்த்து கைக் குழந்தையுடன் நின்ற அந்த பெண் பொது தரிசனத்துக்கு முன்னதாக மயில் சிலை இருக்கும் வரிசையில் சென்றுவிட்டு பின்னர் பிரசாரம் வாங்குவதற்கு சண்முகர் இருக்கு பகுதிக்கு செல்ல முயன்றார். அப்போது கொடிமரத்தில் பணியில் இருந்த செக்யூரிட்டி ஒருவர் அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து அங்கு செல்வதற்கு தடைவிதித்தார்.
நிம்மதி கிடைக்கும் என்பதற்காகத்தான் கோயிலுக்கு வருகிறோம். இதுபோன்றவர்களால் எங்கள் நிம்மதியே போய்விடுகிறது என்று வருத்தத்துடன் அக்குடும்பத்தினர் கூறி சென்றனர்.
எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் செக்யூரிட்டிகள் மீதும், இதை பார்த்து கண்டும் காணததுபோல் இருக்கும் கோயில் பணியாளர்கள் மீதும் அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.









