தமிழ்நாடு முழுவதும் அலோபதி மருத்துவர்களை கொரோனா பணிக்கு தேர்வு செய்துள்ள தமிழ்நாடு அரசு, இதுவரை சிறப்பாக பணியாற்றி வந்த சித்த, ஆயுர்வேத, ஓமியோ மருத்துவர்களை நிறுத்த உத்தேசித்துள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இது அத்துறையினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனையில் கொரோனா வார்டுகளிலும் அதன் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் ஓராண்டுக்கு மேலாக இரவு பகலாக பணிசெய்துவந்த சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவர்களை இன்று முதல் பணிக்கு வரவேண்டாம் என, நிறுத்தியுள்ளனர். இதனால், ஆயுஷ் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
கடந்த வாரம் புதிதாக தற்காலிகமாக எம்.பி.பி.எஸ். மருத்துவர்களை நியமித்து விட்டு, இப்போது ஓராண்டாக கோவிட் வார்டுகளில் சிறப்பாக பணிசெய்து அனுபவமுள்ள ஆயுஷ் மருத்துவர்களை பணிநீக்கம செய்வது ஏற்புடையதல்ல.
இந்த ஆயுஷ் மருத்துவர்கள் சோதனையான,நெருக்கடி மிகுந்த காலங்களில் கொரோனா வார்டுகளில் பணிசெய்தவர்கள். தற்போது ,அவர்களை பணிநீக்கம் செய்ததால் ஆயுஷ் மருத்துவர்கள் கலங்கிப்போயுள்ளனர்.
எனவே, ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் அவர்களின் பணி தொடர தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்.















