தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, களப்பாக்குளம் பஞ்சாயத்தில் புதிய மாடல் சாலைகள் அமைத்து புதுமை படைத்துள்ளனர். அதாவது, பஞ்சாயத்துக்குட்பட்ட என் ஜி ஓ காலனி- எழில் நகர் தெருவில் மையப்பகுதியில் உள்ள மிlன்கம்பங்களை அகற்றாமலே பேவர் பிளாக் சாலை அமைத்துள்ளனர்.
தெருவின் நடுவே ஒன்று, இரண்டல்ல, மூன்று மின் கம்பங்கள் உள்ளன. அதனால் சாலை அமைத்தும் வாகனங்கள் எதுவும் வர முடியவில்லை. அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாததால், துயரகரமான சூழலில் மக்கள் அவஸ்தையை அனுபவித்து வருகின்றனர்.
உள்ளாட்சி நிர்வாகத்தினர் மின்வாரிய அதிகாரிகளிடம் கூறியிருந்தாலே மின்கம்பங்கள் தெருவின் நடுவில் இருந்து அகற்றி ஓரமாக நட்டிருப்பார்கள். இந்த சிறிய வேலையை செய்யாமல், அலங்காரமாக பேவர் பிளாக் அமைத்து எவ்வித பயனும் இல்லை.
இது குறித்து பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஊர் மக்கள் பெரிதும் வருந்துகின்றனர்.














