தற்போது: பள்ளி வளாகத்தில் மர்மமாக இறந்தசிறுமி உடல் திண்டுக்கல்லில் பரிசோதனை – உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

0
998

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் பாச்சலூரில் வசித்து வருபவர் சத்யராஜ். இவர் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் மூன்று குழந்தைகளும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர்.

இதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காலை 11 மணி அளவில் வகுப்பறையை விட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் திரும்பவும் வகுப்பறைக்கு வரவில்லை. இந்நிலையில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பாதி உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார். இதுதொடர்பாக பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை மிகவும் ஆபத்தான நிலையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மாணவி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக தாண்டிக்குடி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பள்ளியில் உள்ள 3 ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தற்பொழுது பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே குழந்தையின் மர்ம சாவு தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை பிரேதத்தை வாங்க மாட்டோம் என பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களை சமாதானம் செய்ய வந்த பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here