நாகர் கோவில் அருகிலுள்ள காப்பு காடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (53) . இவர் ராதாபுரத்திலுள்ள யூனியன் அலுவலகத்தில் டெவலப் மெண்ட். இன்ஜினீயராக பணி புரிந்து வந்தார். இன்று காலை பரமேஸ்வரபுரத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்வதற்காக பைக்கில் சென்றார். பைக்கில் காவல் கிணறு வழியாக வந்த போது பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு சுமார் 10.30 மணியளவில் திருவனந்தபுரம் சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடல் இரு துண்டானது. அவர் ரயிலில் பாயும் முன்பு செல்போனில் யாரோ பேசியுள்ளனர். அதையடுத்தே அவர் ரயில் முன்பு பாய்ந்துள்ளார்.
ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து பகுதியில் செய்யாத வேலைக்கு ரூ.17 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியாக எடுக்க முயன்றதாக அப்பஞ்சாயத்து செயலர் மீது புகார் எழுந்தது. அரசு ஒப்பந்ததாரர்களான இசக்கிமுத்து, சுப்பையா ஆகியோரின் வங்கிக் கணக்கில் வரவு வைத்து அந்தப்பணத்தை அவர் எடுக்க முயன்றுள்ளார்.
இது அப்பகுதி ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்கள் ஆதரவுடன் அரங்கேறியுள்ளது. ஆனால், தன் கணக்கில் செய்யாத வேலைக்கு பில் பணம் விழுந்ததால் பதற்றமடைந்த ஒப்பந்தக்காரர் இசக்கிமுத்து, அப்பணத்தை எடுத்து செயலருக்கு கொடுக்காததோடு, இது பற்றி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துவிட்டார்.
இதுபற்றி விசாரணை நடந்ததால், ஏதாவது சில ஆழ்குழாய்கிணறுகள் அமைத்ததாக பொய்யாக பில் போட்டு பணத்தை நேர் செய்ய பொறியாளர் சந்தோஷ்குமாரை ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. அவர் தற்கொலை செய்ததற்கு முந்தைய நாள், ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் அவரை தனது தோட்டத்துக்கு அழைத்து மிரட்டியதாகவும் தகவல் உள்ளது.
எப்படியோ, சில ஆண்டுகளுக்கு முன்பு வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி அரசியல்வாதிகள் நெருக்கடியால் நெல்லையில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இப்போது ஒரு பொறியாளர் அரசியல்வாதிகள் நெருக்கடியால் நெல்லையில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பொறியாளர் சந்தோஷ்குமாரின் செல்போன் நாகர்கோவில் ரயில்வே போலீசார் வசம் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் உள்ள அழைப்புகள், பதிவுகளை அழிக்காமல் ஆய்வு செய்தால் உண்மை புலப்பட வாய்ப்புள்ளது. ஆனால், போலீசார், சந்தோஷ்குமாரின் மனைவிக்கு உடல்நலமில்லாத கவலையால் அவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ததாக வழக்கை ஊற்றி முடிக்க முயல்வதாக தெரிகிறது.














