காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கான தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இதன்பின்பு இணைய-தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டன. ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்தில் ஜம்மு-காஷ்மீர் கொண்டு வரப்பட்டது. தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ஒவ்வொரு காஷ்மீரியின் வாழ்க்கையும் எங்களுக்கு மதிப்பு மிக்கது. ஒருவர் உயிரிழப்பதனை கூட நாங்கள் விருப்பமில்லை. பொதுமக்களில் யாரும் உயிரிழக்கவில்லை. இங்கு சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை இல்லை. தொலைபேசி மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றை நாங்கள் குறைவாகவே பயன்படுத்தி வருகிறோம். அவை பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தானியர்களால் இடம் பெயர்வதற்கும், தங்களது கொள்கைகளை பரப்பும் வகையிலான போதனைகளை மேற்கொள்வதற்கும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
இது எங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் ஒரு வகையான ஆயுதம். அதனால் அவற்றை நிறுத்தி உள்ளோம். தகவல் தொடர்பு கட்டுப்பாடுகள் மெதுவாக தளர்த்தப்படும். சேவை மெல்ல மீண்டும் நடைமுறைக்கு வரும் என கூறியுள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். அரசு பணியிடங்கள் 2 முதல் 3 மாதங்களில் நிரப்பப்படும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.