கோவை சரவணம்பட்டியை அடுத்த காந்திமாநகர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் அசோக் (28). நேற்று இரவு மது குடிக்க சென்ற போது அங்கு ஏற்கனவே மணிகண்டன் என்கின்ற ஒர்க்ஷாப் மணி அவனது நண்பன் விக் சண்முகம் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே , அசோக்குக்கும் அவர்களுக்குமிடையே ‘யார் பெரியவன்?‘ என்ற போட்டி காரணமாக முன்விரோதம் இருந்துவந்தது. எனவே, ஒர்க்ஷாப் மணியும், விக் சண்முகமும் அசோக்கிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் சமாதானம் பேசி அசோக்கை அனுப்பி வைத்தனர்.
அசோக் வீட்டுக்கு புறப்பட்ட நிலையில் பின்தொடர்ந்து வந்த மணிகண்டன் மற்றும் விக் சண்முகம் ஆகிய இருவரும் அசோக்கை கத்தியால் குத்தினர். கீழே விழுந்த அசோக்கை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அசோக்கின் மனைவி கவுசல்யா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் தப்பியோடிய ஒர்க் ஷாப் மணி மற்றும் விக் சண்முகம் ஆகியோரை தேடி வருகின்றனர்.













