கோவை பாப்பநாயக்கன் பாளையம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் என்பவரின் மகன் தர்மதுரை (30). ஃபிட்னஸ் பயிற்சியாளரான இவருக்கும் போத்தனூர் ஸ்ரீ சத்ய சாய் நகர் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரின் மகள் ஹேசல் ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.ஹேசல் ஜேம்ஸ் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு ஹேசல் ஜேம்ஸ் குடும்பத்தார் தர்மதுரையிடம் தங்கள் மதத்திற்கு மாறும்படி பலமுறை கூறி வந்துள்ளனர். ஆனால் தர்மதுரை மதம் மாறாமல் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தனது கணவரை பிரிந்து சென்று குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் விவாகரத்து கேட்டு ஹேசல் ஜேம்ஸ் தனது கணவர் தர்மதுரைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று திருமண நாள் என்பதால் தர்மதுரை தனது குழந்தைகளை பார்ப்பதற்காக மனைவி வீட்டிற்கு சென்றார். அப்போது ஹேசல் ஜேம்ஸ் வேலைக்கு சென்று இருந்தார்.
மேலும் அங்கிருந்த ஹேசல் ஜேம்ஸின் தந்தை ஜேம்ஸ் மற்றும் சகோதரர் விவின் மற்றும் அவரது மனைவி ஹன்னா மரியா உட்பட குடும்பத்தார் தர்மதுரை குழந்தையை பார்க்க அனுமதிக்காமல் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் தர்மதுரையை உருட்டு கட்டையால் அடித்து உதைத்தனர் .
இதில் தர்மதுரை தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தர்மதுரை அணிந்திருந்த நாலரை பவுன் தங்க செயின், வாட்ச் மற்றும் செல்போனை ஹேசல் ஜேம்ஸ் குடும்பத்தார் பறித்து வைத்துக்கொண்டனர். காயமடைந்த தர்மதுரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து தர்மதுரை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மதுரையின் மாமனார் ஜேம்ஸ் மற்றும் ஹேசல் ஜேம்ஸின் சகோதரர் விபின் மற்றும் அவரது மனைவி ஹன்னா மரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














