கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக, பாஜகவுடன் கிருஷ்ணசாமி கூட்டு வைத்தபோது, தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளையெல்லாம் இணைத்து ஒரே பெயராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். பாஜக அதன் பிரதிநிதியையும் அனுப்பி இதுகுறித்து கேட்டறிந்தது. ஆனால், தேர்தலுக்கு பின்பு கோரிக்கையை கிடப்பில் போட்டது.
இந்நிலையில், அந்த கோரிக்கையை வலுவாக வைத்து நாங்குநேரி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேவேந்திரகுல வேளாளர் சமூக அமைப்பினர் அறிவித்தனர். அத்துடன் தங்கள் பகுதிகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
டாக்டர் கிருஷ்ணசாமியும் இந்த தேர்தலில் புதிய தமிழகம் கட்சி கொடியை பயன்படுத்தவேண்டாம் என அதிமுக கூட்டணியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை மீறி சில இடங்களில் அதிமுகவினர் கிருஷ்ணசாமி படம் இடம்பெற்ற பேனரை வைத்திருந்தனர்.
மூலைக்கரைப்பட்டியில் அதிமுக தேர்தல் பிரச்சார வாகனத்தில் கிருஷ்ணசாமி படம் பொறித்த பேனர் கட்டப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை கடம்பன்குளம் தளவாய்பாண்டி தலைமையில் சிலர் மறித்தனர். இருபுறங்களிலும் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி படம் பதித்த பிளக்ஸ் பேனர்க்ளை அகற்றினர். மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்தனர்.














