,
சுந்தராபுரம் அடுத்த மாச்சம் பாளையம் பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவரின் மகன் ஆகாஷ் குமார்(21).இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு மதுக்கரை சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த 3 பேர் மதுக்கரை போலீசார் என்று தங்களை அறிமுகப் படுத்தியுள்ளனர் .தாங்கள் மப்டியில் இருப்பதாகவும் பைக்கின் ஆர்.சி.புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்கும் படி மிரட்டியுள்ளனர். ஆகாஷ் குமார் காண்பிக்க மறுத்துள்ளார்.
இதையடுத்து ஆகாஷ் குமாரை மூன்று பேரும் மிரட்டியதோடு கைகளால் தாக்கத் தொடங்கினர். தொடர்ந்து ஆகாஷ் குமாரிடம் பைக்கின் ஆர்.சி. புத்தகம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு அவர்கள் வந்திருந்த காரில் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து ஆகாஷ் குமார் மதுக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீஸ் என்று கூறி மிரட்டியவர்கள் வந்திருந்த கார் எண்ணை ஆகாஷ் குமார் குறித்து வைத்திருந்தார். அதை போலீசாரிடம் கொடுத்ததை வைத்து கவுண்டன்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த திருமலைசாமி என்பவரின் மகன் கார்த்திக் (32), ஒன்டிபுதூர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ஜெயச்சந்திரன் (36) மற்றும் பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சரவணக்குமார் (38) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.











