மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி க்கு கட்சியில் திடீரென்று பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கான கூட்டம் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வைகோவின் மகன் துரை வையாபுரி தலைமை கழக செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து வைகோ வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் வைகோ மதிமுக ஆரம்பித்த காலத்திலிருந்து உடன் பயணித்த மதிமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் இன்று தனது பொறுப்புகளிலிருந்து விலகுவதாக ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.













