மா.கம்யூ. மாவட்ட செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெறுவதை ஒட்டி அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோவைக்கு வந்தார். காந்திபுரத்தில் உள்ள மா.கம்யூ. மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். ஆனால், தடுப்பு மருந்து இருப்பு குறித்து தெளிவான தகவலை மத்திய அரசு தெரிவிக்கவில்லை. பெட்ரோலிய பொருட்களுக்கு கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளால் மட்டுமே கடந்த 2020-21 ஆண்டில் 3.71 லட்சம் கோடி பெறப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களின் மீது போடப்பட்ட வரியை குறைப்பதன் மூலமாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க முடியும்.
ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து இந்தியர்களை காக்க அரசு தவறிவிட்டது. எத்தனை இந்தியர்கள் இங்கு அழைத்து வரப் பட்டனர் என்ற தகவல் அரசிடம் இல்லை . ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை பயங்கரவாத நாள் என்று பாஜக அறிவித்துள்ளது. ஆனால், 1938 லேயே சவார்க்கர் இந்தியா இரண்டு தனி நாடாக வேண்டும் என்று வலியுறுத்தினார். 1940க்கு பின்தான் ஜின்னா பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்தார். தற்போது இந்தியாவில் 126 இடங்களில் பாஜக யாத்திரை நடத்தி வருகிறது இது கொரோனா மூன்றாம் அலை பரவுவதற்கு வழிவகுக்கும்’ என்றார்.
இச்சந்திப்பில் எம்.பி., பி.ஆர்.நடராஜன், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.















