வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து நாளை புயலாக மாறும் சூழ்நிலை உள்ளது. யாஸ் என பெயரிடப்பட்ட இந்த புயல் அதிதீவீர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிதீவீர புயலாக மாறும் யாஸ், வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26ஆம் தேதி மாலையில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு சுமார் 165 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்குவங்கம், ஒடிசா மாநில கடற்கரையில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர்.
தமிழகத்தில் யாஸ் புயலால் கடற்கரையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருப்பதால், வருகிற 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி துறைமுகங்களிலும், புதுவை காரைக்கால் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.














