கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுப்புலு என்பவரின் மகன் கமலக்கண்ணன் (29). இவருக்கும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு என்பவரின் மகள் கலைச்செல்விக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கலைச்செல்வி கணவனுடன் கோவையில் வசித்து வருகிறார். கமலக்கண்ணன் எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது அவரது மனைவி கலைச்செல்விக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று கமலக்கண்ணன் தனது மாமனார் சுரேஷ் பாபுவை கோவைக்கு வரச்சொல்லி அழைத்துள்ளார். தனது மகளை பார்ப்பதற்காக வந்த சுரேஷ் பாபுவிடம் மது அருந்துவதற்காக மருமகன் கமலக்கண்ணன் பணம் கேட்டுள்ளார். சுரேஷ்பாபு பணம் தராமல் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கமலக்கண்ணன் மாமனார் சுரேஷ் பாபுவை தகாத வார்த்தைகள் பேசியதோடு தாக்கினார். தகராறு முற்றிய நிலையில் கத்தியால் மாமனாரை குத்தினர். இதில் காயம் அடைந்த சுரேஷ் பாபுவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.தொடர்ந்து சுரேஷ்பாபு மருமகன் கமலக்கண்ணன் மீது அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி கமலக் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.












