திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் விக்னேஷ்(26). இவர் பெங்களூரில் கட்டட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த தந்தையை இழந்து தாயுடன் வசித்து வரும் உறவினரின் மகளான 9 ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியிடம் கடந்த 2 ஆண்டுகளாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் சிறுமியின் தாயிடம் சிறுமியை திருமணம் செய்து தருமாறு விக்னேஷ் கேட்டுள்ளார். 14 வயதில் திருமணம் செய்ய முடியாது, 18 வயது பூர்த்தியான பின்னர் பார்க்கலாம் என சிறுமியின் தாய் விஜயலட்சுமி கூறியுள்ளார்.
இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள இளைஞர் விக்னேஷ் அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் கையில் தாலியுடன் அவசர அவசரமாக புகுந்து சிறுமியை கட்டாயபடுத்தி கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.ஏதும் அறியாது தவித்த சிறுமி கூச்சலிட்டுள்ளார்.
சிறுமியின் சத்தம் கேட்டு வந்த சிறுமியின் தாய் மகளுக்கு நேர்ந்த சம்பவத்தை நினைத்து மன உளைச்சல் ஏற்பட்டு வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தது, கட்டாய தாலி கட்டியது, சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தது, சிறுமியின் தாயை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியது, மானபங்கப் படுத்தியது, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.











