மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வடபுறத்தில் நீண்ட நெடிய தூரம் பரந்து விரிந்திருக்கும் சிறுமலை இயற்கையின் கொடை.
சிறுமலையில் பலதரப்பட்ட அபூர்வ மூலிகைகள் இருப்பதால் சிறு மலைக்கு மூலிகை மலை என்ற பெயரும் உண்டு. இங்கு காபி ஏலக்காய் மிளகு போன்ற உயர்தர விவசாய பொருட்கள் விடுவதுடன் பழங்கள் காய்கறிகள் பெருமளவு பயிர் செய்யப்படுகிறது.
இந்த சிறுமலையில் ஆபத்தை உருவாக்கும் வனவிலங்குகளும் பெருமளவில் உள்ளன. மேலே உள்ள தோட்டங்களில் ஆட்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் வனவிலங்குகள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும், அடிக்கடி மலையிலிருந்து கீழே இறங்கி வருவது வாடிக்கையான ஒன்று. இதுபோன்று மலையடிவார கிராமத்தில் இறங்கும் வனவிலங்குகள் மலையை ஒட்டி பயிர் செய்யப்பட்டிருக்கும் பயிர்களை உணவுக்காக அழிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று அதிகாலை வாடிப்பட்டி அருகே உள்ள பழனி ஆண்டவர் கோயில் அருகே சிறுமலை அடிவாரத்தில் காட்டெருமைகள் கூட்டமாக இறங்கி அங்கே பயிர் செய்யப்பட்டிருக்கும் விளைநிலங்களில் புகுந்தன .
இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை கருத்தில்கொண்டு வனத்துறையினர் வனவிலங்குகளை மலையில் இருந்து தரை இறங்க விடாமல் தடுத்து விவசாயத்தை பாதுகாத்து தரவேண்டும் என்பதே மலையடிவாரத்தில் உள்ள கிராம மக்களின் கோரிக்கையாகும்.












