தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, புகையிலைகள் மளிகை கடைகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் தலைமையில் நாமக்கல் மாவட்டம் முழுதும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர், நேற்று இரவு விடிய, விடிய நாமக்கல் .திருச்செங்கோடு இராசிபுரம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதியில் செயல்படும் மளிகை கடைகள், குடோன்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இச் சோதனையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 1300 கிலோ புகையிலை குட்கா பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்ததோடு 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் ரொக்க பணம் மற்றும் ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மாவட்டத்தில் குட்கா பான்மசாலா பொருட்கள் விற்பவர்கள் தானாக முன் வந்து அந்தந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படமாட்டாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 23 ந் தேதி நடத்திய சோதனையில் ரூ.29 லட்சம் மதிப்பிலான 2.70 டன் குட்கா மற்றும் ரூ. 7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்ததுடன் 43 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












