திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் டீல் இம்தியாஸ். இவர் சென்னையில் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் கஞ்சா மற்றும் பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில் 20 பேர் கொண்ட போலீஸார் திடீரென வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள இம்தியாஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் நுழைந்த சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்தில் மறைத்து வைத்திருந்த சுமார் 3 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சாா, 10 பட்டாக்கத்திகள்,10 செல்போன்கள் பறிமுதல் செய்து அலுவலகத்தில் இருந்த ரஹீம், பசல், சலாவுதீன் மற்றும் கரன்குமார் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸ் என்பவரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வஹா உத்தரவின்பேரில் வருவாய்த்துறையின் இம்தியாஸ் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.











