மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு மக்களின் விருப்பத்துக்கு மாறாக மோடி அரசு செயல்படாது என்று திமுக துரைமுருகனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
மேகதாது அணை கட்டுவது குறித்த கேள்விக்கு,’
இந்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாட்டின் சார்பில் நமது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழு சந்தித்தது. தமிழக தரப்பு கருத்துக்களை கேட்டுக்கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாது அணை கட்டப்படாது என்று உறுதி அளித்திருக்கிறார். தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக ,மோடி அரசு செயல்படாது என்று நம்புவோம் என்றார்.
நீட் தேர்வு ரத்து செய்வது குறித்த கேள்விக்கு,’
நீட் தேர்வில் தமிழக மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்வதற்காக அமைத்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு விவரமான அறிக்கையை அளித்துள்ளது. அதன் மீதான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும். இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டதால், நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சி அளித்து வருகிறது. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை நமக்கு சாதகமாக அமையும் என நம்புகிறோம்’ என்றார்.













