நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 என்ற விண்கலத்தை ராக்கெட் மூலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவியது.
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியதுதான் சந்திரயான்-2 விண்கலம். விண்கலம் நிலவை நெருங்கியதை தொடர்ந்து ஆர்பிட்டரில் இருந்து, பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் கடந்த 2-ந் தேதி தனியாக பிரிந்தது. படிப்படியாக லேண்டரை நிலவின் மேற்பரப்பை நோக்கி இறக்கி வந்தது.
செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1.45 மணியளவில், சந்திர மேற்பரப்பில் இறங்குவதற்கு 12 நிமிடங்களுக்கு முன் , லேண்டர் பூமியுடனான தொடர்பை இழந்தது. இது அதன் பாதையிலிருந்து விலகி சந்திரனில் விழுந்ததாக நம்பப்படுகிறது. செப்டம்பர் 8 ஆம் தேதி சந்திரனில் லேண்டர் விக்ரம் எங்குள்ளது மற்றும் லேண்டரின் நிலை என்ன என்பது குறித்த தெளிவான படம் எடுப்பதற்கான முயற்சியை ஆய்வு செய்தது இஸ்ரோ.
நிலவில் விக்ரம் லேண்டர் இறக்க திட்டமிடப்பட்ட இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் விக்ரம் லேண்டர் விழுந்து உள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்து உள்ளார்.
முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி சந்திர பூமத்திய ரேகைக்கு 70 டிகிரி தெற்கிலும் சந்திர தென் துருவத்திலிருந்து 600 கி.மீ தொலைவிலும் இருந்தது.
செப்டம்பர் 8ம்தேதி, லேண்டருடனான தொடர்பை மீட்டெடுக்க இஸ்ரோ முயற்சி எடுத்து வருவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
“சந்திர மேற்பரப்பில் லேண்டர் விக்ரமின் இருப்பிடத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். சுற்றுப்பாதையில் உள்ள ஆர்பிட்டர், அதன் படத்தைக் கிளிக் செய்துள்ளது. அதனுடன் தொடர்பை மீண்டும் தொடர முயற்சிக்கிறோம் என கூறினார்.
சுற்றுப்பாதையில் உள்ள சந்திராயன் விண்கலத்தில் 30-செ.மீ தெளிவுத்திறன் கொண்ட சிறந்த ஆர்பிட்டரில் உயர் தெளிவுத்திறன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து உடையவில்லை. கடினமான தரையிறக்கத்தைத் தொடர்ந்து சாய்ந்த நிலையில் அது உள்ளது, அதே நேரத்தில் அதனுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன என இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறினார்.