L
கோவை, சின்ன தடாகம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தேவதாசன். இதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது 14 வயது மகன் அகிலேஷ் காரமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அகிலேஷ் பாடங்களில் சரிவர கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் அகிலேஷின் தந்தையை போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். கேரளாவிலிருந்த தேவதாசன் உடனடியாக தனது மகன் அகிலேஷை போனில் அழைத்து பாடங்களில் கவனம் செலுத்துமாறு கோபத்துடன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அகிலேஷ் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை அகிலேஷ் குளிப்பதாக கூறிவிட்டு, குளியலறைக்குச் சென்று டவலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெடுநேரமாகியும் அகிலேஷ் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குளியல் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது அகிலேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.