கோவை அன்னூர் ஒன்றியம் ஒற்றர் பாளையத்தில் தண்டல் காரராக ( தலையாரி )பணிபுரியும் முத்துசாமி என்பவர் விஏஓ அலுவலகத்திலேயே மனுதாரர் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் ஒற்றர் பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே அலுவலகத்தில் முத்துசாமி என்பவர் தண்டல்காரர் ஆக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் தனது சொத்து விபரங்களை சரிபார்ப்பு விஷயங்களுக்காக விஏஓ அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி, கோபிநாத் ஆவணங்களில் சரியான ஆவணங்கள் இல்லை என்றும் முறையான ஆவணங்களை கொண்டு வாருங்கள் என்று கூறியிருக்கிறார். அப்போது கோபிநாத் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தண்டல்காரர் முத்துசாமி குறுக்கிட்டு அரசு அலுவலர்களிடம் தவறாகப் பேச வேண்டாம் என்று கூறி சமாதானப் படுத்த முயற்சி செய்திருக்கிறார். இதையடுத்து கோபிநாத் முத்துசாமியை திட்டியதோடு புகார் அளித்து பணியிலிருந்து தூக்கி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தண்டல்காரர் முத்துசாமி ,கோபிநாத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதை அந்த அலுவலகத்தில் இருந்த ஒருவர் யாருக்கும் தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார். முத்துசாமி விஏஓ அலுவலகத்தில் விஏஓ கலைச்செல்வி முன்னிலையில் காலில் விழுந்து கதறும் காட்சி கோவையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















