தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழக சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், சென்னையில் அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆற்றுப்படுகையில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டமிடப் பட்டுள்ளது என்றும், அந்தத் திட்டம், சென்னை ஆறுகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை மூலம் செயல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இதற்காக ரூ.2,371 கோடி செலவிடப்படும் என்றும் அப்போது அறிவித்தார். இந்த திட்டம் குறித்து அரசுக்கு சென்னை பெருநகர குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், சென்னை பெருநகர பகுதிக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த இரண்டு கட்டங்களாக பணிகள் நடத்தப்படவுள்ளது. முதல் கட்ட பணிகளுக்கு ரூ.1,001 கோடி செலவிடப்பட வேண்டும். இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.1,370 கோடி செலவாகிறது.
எனவே இந்த பணிகளுக்கு ரூ.2,371 கோடிக்கு அரசு ஒப்புதல் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கடிதத்தை அரசு கவனமுடன் பரிசீலித்து கொள்கை அளவில் அங்கீகரித்து இருக்கிறது.
அதே நேரத்தில், முதல் கட்ட பணிகளுக்கு தேவையான ரூ.1,001 கோடிக்கான நிர்வாக ஒப்புதலை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.














