கோவை மாங்கரை அருகே உள்ள பெரிய தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (75). இவர் தோட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது மாந்தோப்பில் நேற்று இரவு ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்துள்ளது. அதனை பார்த்த அவர் சத்தம் போட்டவாறு யானையை நோக்கி சென்றுள்ளார்.இதனையடுத்து யானை அங்கிருந்து சென்றது.
யானை சென்றதை அடுத்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார் அப்போது திரும்பிச் சென்ற யானை திடீரென லட்சுமணனை துரத்தி வந்து தும்பிக்கையால் தட்டிவிட்டு காலில் மிதித்துள்ளது.இதில் அவரது இரண்டு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் சத்தம் போட்டுள்ளார். இதனை அடுத்து அந்த யானை அங்கிருந்து சென்றது.
இந்நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் லட்சுமணன் வீட்டிற்கு வெளியே படுத்திருப்பதைப் பார்த்து அங்கு சென்றுள்ளனர் .அப்போது யானை தாக்கியதில் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் இருந்த லட்சுமணன் குறித்து கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.














