‘ஆற்றுக்குள் போட்டாலும் அளந்து போடு ‘என்பார்கள். ஆற்றிலும் கடலிலும் ஏதாவது திட்டத்தை செயல்படுத்தினால் கணக்கு தெரியாது, நஷ்டம் வந்தாலும் தண்ணீரில் போச்சு என்று சொல்லிக் கொள்ளலாம்.
இதே தந்திரத்தை தான் சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாகமும் கடைப்பிடிக்கிறதோ என்னவோ? பேரூராட்சி சார்பில் மின் மயான கட்டடம் ரூ 1.4கோடி செலவில் கட்ட தீர்மானிக்கப்பட்டு முக்கால்வாசி வேலை முடிந்துள்ளது. ஏற்கனவே வெள்ளக் காலங்களில் அதிக சேதம் ஏற்படுவதால் ஆற்றுக்குள் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு உள்ளது
தற்போது மின் மயானம் கட்டப்பட்ட நிலையில் இரு நாட்கள் ஆற்றில் மழை வெள்ளத்துக்கே மின் மயானம் பாதி அளவு மூழ்கி விட்டது. பல நாட்கள் வெள்ளத்திலேயே கிடந்தது. மயானம் செயல்பாட்டுக்கு வந்தாலும் எப்படியும் ஒரு மாதம் வரை வெள்ள நீர் வடியாமல் நிற்கும். மழைக்காலத்தில் தான் உயிர்கள் அதிகமாக நடக்கும்.எனவே, மழைக்காலத்தில் அந்த மின் மயானத்தை பயன்படுத்த முடியாது. மேலும், மழை நீருக்குள் மூழ்கிக் கிடந்தால் ஆண்டுதோறும் மின்மயான எந்திரம் பழுதாகிவிடும். ஒவ்வொரு ஆண்டும் அதற்கான செலவு அதிகரிக்கும். எனவே இத்திட்டம் தோல்வியான திட்டம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

அதே வேளையில், பொதிகையடி முதல் புன்னைக் காயல் வரை ஆற்றை 1920க்கு முந்தைய வரைபடம் மற்றும் சாட்டிலைட் படம் மூலம் அளந்து கரை அமைத்து கரைக்கு அப்பால்தான் எந்த ஒரு கட்டடத்தையும் கட்ட வேண்டும் என்று தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து கூறி வருவதோடு, சேரன்மகாதேவி மின்மயானத்தை ஆற்றில் இருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சேரன்மகாதேவி ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட4 உறை கிணறுகளுக்கு ஆற்று மணலை டன் கணக்கில் திருடி பயன்படுத்தியதாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் ஆதாரத்துடன் கூறியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மணலை திருடிய ஒப்பந்தக்காரர், உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.









