நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை திருமால் நகரில் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம் இயங்குகிறது. இங்கு சுமார் 100 அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.
மாவட்டம் முழுவதிலிருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இந்த அலுவலகத்திற்கு வருகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அலுவலகம் வருவதற்கு என்ஜிஓ காலனி – ரெட்டியார்பட்டி சாலையிலிருந்து திருமால் நகருக்கு வரும் இணைப்பு சாலை ஆங்காங்கே துண்டாடப்பட்டுள்ளது. திருமால் நகர் கீழத் தெருவில் இருந்து தொழிலாளர் அலுவலகத்திற்கு செல்லும் கருங்கல் சாலை மோசமாக உள்ளது .
ஏற்கனவே குண்டும் குழியுமான ஆழமான பள்ளங்கள் இருப்பதால் நடந்து செல்பவர்கள் கூட விழுந்துவிடும் அபாயம் உள்ளது. சமீபத்தில் பெய்த மழையில் சாலைகளின் குறுக்கே நீரோடைகள் இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

அந்த சாலையை சீரமைக்கும் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் தொழிற்சங்கம் இன்று சீரமைப்புப் பணியை மேற்கொண்டது. தொழிலாளர் துணை ஆணையர் சுடலை ராஜன், கண்காணிப்பாளர் சரோஜா ஆகியோர் முன்னிலையில் நெல்லை பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் (பொ ) அலெக்சாண்டர் சாமுவேல் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் இதழாளர் அய்கோ, தொமுச பேரவை மாவட்ட செயலாளர் வேல்முருகன், சிஐடியு பொறுப்பாளர் வேல்முருகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க பொறுப்பாளர்கள் கண்ணப்பன், ராஜேந்திரன், அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் அந்தோணி ராஜ், விஸ்வகர்மா பொது தொழிலாளர் சங்க சந்திரன், பகுஜன் மக்கள் தொழிலாளர் சங்க சிவாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் அரை கிலோ மீட்டர் தூரச் சாலை சீரமைத்து செப்பனிடப்பட்டது.









