அதிகரித்து வரும் பெட்ரோல்,டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். விலைவாசிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை விற்பனை செய்யாமல்,போதிய தடுப்பூசிகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட எம்.பி பி.ஆர்.நடராஜன் தலைமையில் இடது சாரிகள்,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன்’ 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பதிவியேற்ற போது இருந்த அதே விலைக்கு பெட்ரோல் டீசலை விற்பனை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு இயற்றிய மூன்று வேளான் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் கொரோனா நிதியாக குடும்பங்களுக்கு 7500 ரூபாய் வழங்கிட வேண்டும் என்றார். தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய 12 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்றார்.
இந்தியாவில் போலியோ,அம்மை தடுப்பூசி போன்றவை இலவசமாக வழங்கபட்ட நிலையில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசி விலைக்கு விற்பதை ஏற்று கொள்ள முடியாது எனவும் தடுப்பூசிகள் இலவசமாகவே வழங்கபட வேண்டும் என்றும் தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பாராபட்சமின்றி தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்கிட வேண்டும் என்றார்.














