பீஹாரில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ஜெகன்நாத் மிஸ்ரா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆக., 19 ல் காலமானார்.
அவரது உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என பீஹார் அரசு கூறியது. இதன்படி, அவரது சொந்த கிராமத்தில் இறுதிச்சடங்கு நடந்தது.
இதில், முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
அப்போது, அரசு சார்பில் 22 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்த போலீசார் ஒன்றாக தங்களது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர்.
ஆனால், ஒரு துப்பாக்கி கூட வெடிக்கவில்லை. அதிர்ச்சியடைந்த போலீசார், துப்பாக்கிகளை சோதனை செய்து பார்த்தனர். ஆனால், அவர்களின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. துப்பாக்கிகள் வெடிக்காத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
ஆர்ஜேடி எம்எல்ஏ யதுவன்ஸ் குமார் யாதவ், இது ஜெகன்நாத் மிஸ்ராவிற்கு இழைக்கப்பட்ட அவமானம். விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கூறினார்












