முதலீடு செய்த தொகைக்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ. 55 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
மதுரை காளவாசலை தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது வேர்ல்ட் சேர்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிடெட். இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து பலர் முதலீடு செய்துள்ளனர். இதில் குறிப்பிட்ட நாட்களில் இரட்டிப்பாக பணத்தை திருப்பித் தந்த நிறுவன உரிமையாளர்கள், மேலும் தங்களுக்கு கீழ் உறுப்பினர்களை சேர்த்து முதலீடு செய்தால் கூடுதல் தொகை தருவதாக ஆசை வார்த்தை தெரிவித்தனர்.
இதனை நம்பிய முதலீட்டாளர்கள் பலர் தங்களது உறவினர்கள், நண்பர்களிடம் பணம் பெற்று முதலீடு செய்தனர்.
பிப்ரவரி மாதம் வரை முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பித் தந்த உரிமையாளர்கள் அதன்பிறகு பணம் தரவில்லை. அவர்களை தொடர்பு கொண்ட போது எந்த தகவலும் தெரிவிக்காமல் போனை துண்டித்து விட்டனர். தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என அறிந்த முதலீட்டாளர்கள் மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் புகார் தெரிவித்தனர்.
இதில் தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ. 55 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனந்தி, செய்யது. பாரூக், மனோஜ் ஆகியோர் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.












