மதுரை எஸ்.எஸ்.காலனி அருகேயுள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவருடையை மனைவி மற்றும் அவர்களது 7வயது மகன் நித்திஸ் தீனா ஆகியோர் இன்று காலை மதுரை அழகப்பன் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஜவுளிக்கடையில் தீபாவளி பண்டிகைக்காக துணி எடுத்துள்ளனர்.
துணிகளை வாங்கிவிட்டு 5ஆவது மாடியில் இருந்து எஸ்கலேட்டர் வழியாக இறங்க முயன்றபோது எஸ்கலேட்டர் அருகில் இருந்த இடைவெளியின் திடிரென சிறுவன் சென்றதால் 5ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்தான்.
அடுத்தடுத்து மாடிகளில் உள்ள கல்தூண்கள் சிறுவனின் தலையில் இடித்ததில் தலை உடைந்து அதிகளவிற்கு ரத்தம் வெளியேறியதாக கூறப்படுகிறது. சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கடையில் இருந்த எஸ்கலேட்டர் அருகில் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி தடுப்புகள் உரிய முறையில் இல்லாததால் குழந்தை தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே அவசர அவரசரமாக சம்பவம் நடைபெற்றதற்கான ரத்த அடையாளங்களை ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி அழித்ததால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், விபத்து குறித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டபோது ஊழியர்கள் உரிய விளக்கம் அளிக்காமல் காவல்துறையினரை திசை திருப்பியுள்ளனர்.
சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும் கடை நிர்வாகம் எந்தவித பதட்டமும் இன்றி தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் பொதுமக்களை வியாபாரத்திற்காக அனுமதித்ததாக சிலர் குற்றஞ்சாட்டினர்.













