ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடந்த நேற்று முன் தினம் பெண் ஒருவர் தனியாக நீண்ட நேரம் காத்திருப்பதாக வேலூர் அரசு கால்நடை மருத்துவரும், சமூக சேவகருமான மருத்துவர் ரவிஷங்கருக்கு தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து நேரில் சென்ற ரவிஷங்கர் அப்பெண்ணிடம் விசாரித்ததில், அந்த பெண் கணவனால் கைவிடப்பட்டு, அனாதரவான நிலையில் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் 8 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக வாலாஜா அரசு மருத்துவமனையில் அனாதையாக சிகிச்சை பெற்று 12ஆம் தேதி முன்னிரவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர், அங்கிருந்து காவேரிப்பாக்கம் வரை நடந்து வந்ததாகவும், மறுநாள் இரவு வரை உணவும் இருப்பிடமும் இன்றி பஸ் நிலையத்திலேயே இருந்ததாகவும் தெரிவித்தார்.
அவர் கையில் இருந்த 12 மாத குழந்தையும் பசியில் மயங்கிக்கிடந்தது. அதையடுத்து மருத்துவர் ரவிஷங்கர் அந்த பெண்ணை குழந்தையோடு காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தகவல் தெரிவித்துவிட்டு, வேலூருக்கு அழைத்து இருவருக்கும் உணவளித்து, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வேலூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்ந்துள்ளார்.
அந்த பெண் தொடர்ந்து உணவு உட்கொள்ளாததால் அதீத இரத்த சோகை பாதிப்பில் இருப்பதாகவும், , அவருடைய குழந்தைக்கு அண்ணப் பிளவை ஏற்பட்டுள்ளதாகவும் (Cleft Palate) மருத்துவர் ரவிஷங்கர் தெரிவித்தார்.













